இன்று (5.2.2025) கர்நாடக மாநிலம், பெங்களூருவில் UGC வரைவு நெறிமுறைகள் குறித்து
நடைபெற்ற மாநிலக் கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் UGC வெளியிட்ட வரைவு நெறிமுறைகளை
திரும்ப பெறக் கோரி மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர்.கோவி.செழியன்
அவர்கள் ஆற்றிய உரை:-
வணக்கம்!
இந்த அரிய வாய்ப்பினை எனக்கு உருவாக்கி தந்த
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், மாண்புமிகு துணை முதலமைச்சர்
திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்
கொள்கிறேன். UGC விதிமுறைகள் குறித்தான இந்த முக்கியமான மாநாட்டில் தமிழ்நாடு
மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவது எனக்கு கிடைத்துள்ள பெரும் பேறாகும்.
கல்வி, சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் தமிழ்நாடு
எப்பொழுதும் முன்னணியில் உள்ளது. கல்வியானது மாணவர்களுக்கு நன்மை பயக்கும்;
என்பதால் அவர்களின் கற்றல் விளைவுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தவேண்டும்
என்பதில் தமிழ்நாடு உறுதியாக உள்ளது. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில்
ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்களின் நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கான
குறைந்தபட்சத் தகுதிகள் மற்றும் உயர்கல்வியில் தரங்களைப் பேணுவதற்கான நடவடிக்கைகள்,
இளநிலை மற்றும் முதுநிலை சேர்க்கைகான நுழைவுத் தேர்வு, 2024 மற்றும் 2025
பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு (UGC) சட்டம், 1956இன் கீழ் அண்மையில் வெளியிடப்பட்ட
வரைவு நெறிமுறைகள் வருங்காலத்தில் மாநிலத்தின் சுயாட்சியினை முழுவதுமாகப் பறிக்கும்
வகையில் உள்ளது. இந்த விதிகளின் மையப்படுத்தப்பட்ட அணுகுமுறை ஒன்றிய-மாநில
உறவுகளுக்குக் கடுமையான அச்சுறுத்தலையும் ஏற்படுத்துகிறது.
UGC சட்டம், 1956-இன்
பிரிவு 26-இன் கீழ், உருவாக்கப்பட்ட பல்கலைக்கழக நிதிநல்கைக் क (UGC Draft
Regulations 2024 and 2025) பல்கலைக்கழகச் சட்டங்களை முறியடிக்கும் நோக்கம்
கொண்டதாக இருப்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது. வரைவு UGC நெறிமுறைகள் ஒரு வழிகாட்டு
நெறிமுறைகளே ஆகும். மேலும், இந்த வரைவு மாநிலச் சட்டங்களைப் போலல்லாமல்
தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவால் வடிவமைக்கப்பட்டுள்ளது. வரைவு UGC விதிமுறைகளை
அமல்படுத்தும் முயற்சி UGC-யின் அத்துமீறலைத் தவிர வேறில்லை. சட்டப் பிரிவு
12(d)-இன் கீழ், UGC-இன் அதிகாரங்கள் வெறும் பரித்துரை மட்டுமே. அது உயர்கல்வியில்
தரநிலைகள் குறித்து ஆலோசனை கூறலாம். ஆனால், அதை அமுல்படுத்த மாநிலங்களைக்
கட்டாயப்படுத்திட முடியாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வரைவு
விதிமுறைகள், அதிகாரப் பிரிவினை மற்றும் கூட்டாட்சி முறை ஆகிய இரண்டும்
அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களைச் சீரழிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பான
முக்கியமான அரசியலமைப்புச் சிக்கலை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. கல்வி நமது
அரசியலமைப்புச் சட்டத்தின் பொதுப் பட்டியலில் (Concurrent List) உள்ளது. மத்திய
அரசுடன் ஒருங்கிணைந்து பல்வேறு திட்டங்களை மேலோட்டமாகப் பார்க்கவும்
செயல்படுத்தவும் மாநில சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அரசமைப்புச் சட்டத்தின்
254(1) பிரிவு, ஒரு மாநிலச் சட்டம் மத்தியச் சட்டத்திற்குப் புறம்பாக இருந்தால்,
மத்தியச் சட்டமே மேலோங்கும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
இருப்பினும், இது
பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டங்களால் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு மட்டுமே
பொருந்தும் மற்றும் இந்த UGC வரைவு விதிமுறைகள் போன்ற பிரதிநிதித்துவ
சட்டங்களுக்குப் பொருந்தாது. மேலும், UGC வெளியிடப்பட்டுள்ள வரைவு நெறிமுறைகள்
பல்கலைக்கழகங்களில் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான உண்மையான முயற்சியை விட
தேசியக் கல்விக் கொள்கையை புறவழியாக அமுல்படுத்துதையே பிரதிபலிக்கின்றது.
நிறைவேற்றப்படாமல். இந்த ஒழுங்குமுறைகள் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவ
சட்டத்தின் போர்வையில் திணிக்கப்படுகின்றது. மாண்பமை உச்சநீதிமன்றத்தில் கல்யாணி
மதிவாணன் என்பவருக்கு எதிராக கே.வி.ஜெயராஜ் தொடர்ந்த வழக்கில், UGC விதிமுறைகளை
அரசு ஏற்காத பட்சத்தில் மாநிலப் பல்கலைக்கழகங்கள் கட்டாயம் இதனைப் பின்பற்ற
வேண்டும் என்பதில்லை என்று தீர்ப்பளித்தது.
எனவே, விதிமுறைகளை வகுப்பதில் ஒவ்வொரு
கட்டத்திலும் மாநிலங்களின் ஒப்புதல் மற்றும் ஆலோசனை பெறுவது முக்கியமாகும். இந்த
விதிகளுக்குப் பின்னால் தெளிவான அறிவியல் காரணம் இல்லை மற்றும் எந்த ஆய்வுக்
கண்டுபிடிப்புகளும் இல்லை. பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு ஏதேனும் நிபுணர்களை
கலந்தாலோசித்ததா அல்லது மாணவர்கள் மற்றும் நிர்வாகிகள் எழுப்பிய உண்மையான
சந்தேகங்களை நிவர்த்தி செய்ததா என்பதும் தெளிவாக இல்லை. UGC மற்றும் தேசியக்
கல்விக் கொள்கை (NEP) ஆகியவற்றின் வழிகாட்டுதல்கள், நமது நாட்டிற்கு அதன் பொருத்தம்
மற்றும் பயனைப் பற்றி எந்தச் சிந்தனையையும் கருதாமல் மேற்கத்தியத்தை நகலெடுப்பதாகத்
தெரிகிறது. இந்திய அரசாங்கத்தால் நடத்தப்பட்ட பொருளாதார ஆய்வு உட்பட பல
வேலைவாய்ப்பு ஆய்வுகள், கல்வி முடிவுகள் மோசமாக இருப்பதாகவும், அதிக எண்ணிக்கையிலான
பட்டதாரிகள் வேலை கிடைக்காமல் போராடுவதாகவும் காட்டுகின்றன. இந்த வரைவு
விதிமுறைகள், கல்வித் தரம் குறித்த தீவிரப் பிரச்சினைகளைத் தீர்க்காமல், ஒப்பனை
மற்றும் மேலோட்டமான கருத்தை முன்மொழிகிறது மற்றும் எந்த விதமான தேவை மதிப்பீடு
அல்லது அறிவியல் அடிப்படையின்றி ஏற்கனவே நிறுவப்பட்ட நடைமுறைகளைச் சிதைக்கும்
முயற்சியாகும். உயர்கல்வியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உள்ளது.
அண்மையில்
வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாடு அரசு ரூ.8,212 கோடிகளை ஒதுக்கியது.
இது ஒட்டுமொத்த தேசத்திற்கும் ஒன்றிய அரசின் மொத்த ஒதுக்கீட்டில் 17% ஆகும்.
முறையான நிதியுதவி இல்லாமல் கல்வி முறையில் புதிதாக விதிகளைச் சுமத்துவது
நியாயமற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. தமிழ்நாட்டில் உள்ள பொதுப்
பல்கலைக்கழகங்கள் மாநில சட்டமன்றச் சட்டங்கள் மூலம் உருவாக்கப்பட்டு, அரசின்
நிதியுதவியுடன் சம வாய்ப்புகள் மற்றும் இடஒதுக்கீடு உள்ளடக்கிய சமூக நீதியுடன்
செயல்பட்டு வருகின்றன. துணைவேந்தர்களுக்கான தேடல் மற்றும் தேர்வுக் குழுக்களில்
இருந்து மாநில அரசு ஒதுக்கப்படுவதைத் தமிழ்நாடு எதிர்க்கிறது. மாநில அரசின்
உறுப்பினர் ஒப்புதல் இன்றி எடுக்கப்படும் துணைவேந்தர் நியமனம் தொடர்பான முடிவுகள்
பல்கலைக்கழக நிர்வாகத்தில் மாநில சுயாட்சியைச் சிதைக்கும் முயற்சியாகும். மாநில
சட்டப் பேரவையின் சட்டத்தின் மூலம் மாநில அரசுப் பல்கலைக்கழகங்களை நிறுவியுள்ளது.
எனவே, மாநிலப் பல்கலைக்கழகங்களின் மீது மாநில அரசுக்கு முதல் உரிமை உள்ளது மற்றும்
துணைவேந்தர்களுக்கான தேடல் குழுவை அமைப்பதற்கான சட்டப்பூர்வ உரிமையை மாநில அரசு
பெற்றிருக்க வேண்டும்.
கல்வியியலாளர்கள் அல்லாதவர்களை துணைவேந்தர்களாக நியமிக்கும்
விதிகள் கவலைக்குரியதாக உள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு கல்வியாளர்கள் மற்றும்
நிர்வாகம் இரண்டையும் புரிந்து கொள்ளும் தலைவர்கள் தேவை: இவர்கள் வணிகத்தில்
மட்டும் கவனம் செலுத்தும் நபர்கள் அல்ல. இந்த விதிமுறைகளை அமல்படுத்துவது கல்வியை
வெறும் வியாபாரமாக மாற்றி அதன் தரத்தைச் சீரழித்துவிடும். ஆசிரியர்கள் நியமனத்தில்,
NET/SET தேர்வை மட்டுமே அளவு கோலாகக் கொண்டு தொடர்பில்லாத பாடங்களில் ஆசிரியர்களை
கற்பிக்க செய்வது மாணவர்களின் கற்றல் விளைவுகளைப் பாதிக்கக்கூடியதாகும். திறமையான
அறிவுப் பரிமாற்றத்திற்கு ஆசிரியர்கள் தாங்கள் கற்பிக்கும் பாடங்களில் நிபுணத்துவம்
பெற்றிருக்க வேண்டும். பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த மாணவர்கள் மீது நியாயமற்ற
சுமையை ஏற்படுத்தும் பொது நுழைவுத் தேர்வுகளை தமிழ்நாடு எப்போதும் எதிர்க்கிறது.
உயர்கல்வியில் 47% என்ற தமிழ்நாட்டின் மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் (GER)
எங்களின் கொள்கைகளின் வெற்றியைக் காட்டுகிறது.
இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்
சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுகள் தமிழ்நாட்டின் முன்னேற்றத்தைப் பாதிக்கும்.
குடும்பங்களுக்கு நிதி நெருக்கடியை அதிகரிக்கும்; பயிற்சி நிலையங்களை அதிகரிப்பதையே
இந்த நுழைவுத் தேர்வு ஊக்குவிக்கிறது. தற்போது மத்திய பள்ளிக் கல்வி வாரியம் (CBSE)
உட்பட அனைத்துப் பள்ளி வாரியங்களும் ஏற்கனவே பல தேர்வுகள் மற்றும் பொது தேர்வுகள்
மூலம் மாணவர்களை மதிப்பீடு செய்கின்றன. அதிக போட்டி நிறைந்த நுழைவுத் தேர்வுகள்,
தற்போதுள்ள தேர்வுகளை அர்த்தமற்றதாக்கி, மாணவர்களுக்கு மனச்சுமையை ஏற்படுத்தும்.
இது நியாயமற்றது என்பதுடன் கற்றல் விளைவுகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்பதை
தெரிவித்து கொள்கிறேன். ஆண்டுக்கு இருமுறை சேர்க்கை மற்றும் பல நுழைவு மற்றும் பல
வெளியேறுதல் (Multiple Entry and Multiple Exist (MEME)) போன்றவை கல்வி முறையை
முற்றிலும் சீர்குலைக்கும். இந்தச் சேர்க்கைகள் கட்டமைப்பு சவால்களை
உருவாக்குகின்றன, மாணவர்களைத் தனித்தனிக் குழுக்களாகப் பிரிக்கின்றன மற்றும்
வரையறுக்கப்பட்ட கற்பித்தல் வளங்களில் அழுத்தம் கொடுக்கின்றன. MEME இடைநிற்றல்களை
ஊக்குவிக்கிறது, இது மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கும் மாணவர்களைத் தக்கவைப்பதை
மேம்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் தமிழ்நாடு அரசின் முயற்சிகளுக்கு எதிரானது.
இந்த விதிகள் பின்பற்றப்படவில்லையெனில் பல்கலைக்கழகங்கள் பட்டங்கள் வழங்குவதை
நிறுத்தும் பட்டங்களை ரத்து செய்யும் தண்டனை நடவடிக்கை என்பவையெல்லாம் கொடுமையானவை
மற்றும் ஜனநாயக விரோதமானவை. இந்தத் தீங்கான விதிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும்
என்றும், ஜனநாயக முறையில் உயர்கல்வியை உருவாக்க மாநிலங்களுடன் இணைந்து
செயல்படுமாறும் ஒன்றிய அரசை தமிழ்நாடு வலியுறுத்துகிறது. மாணவர்கள், ஆசிரியர்கள்
மற்றும் கல்வி நிறுவனங்களின் உரிமைகளுக்காக தமிழ்நாடு தொடர்ந்து போராடும். நமது
கல்வி அமைப்பில் சமூக நீதியின் அடித்தளத்தைப் பாதுகாப்பதற்கும், கல்வி
அதிகாரமளிப்பதற்கான ஒரு கருவியாக இருப்பதை உறுதி செய்வதற்கும் நாங்கள் உறுதி
பூண்டுள்ளோம். இந்த மாநாட்டிற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், மாண்புமிகு
துணை முதலமைச்சர் அவர்கள் தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்; மீண்டும்
ஒருமுறை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு துணை
முதலமைச்சர் அவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி,
வணக்கம்! இவ்வாறு, மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.