கூடலூர் அருகே எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதும் பழங்குடியின மாணவர்களின் வீடுகளுக்கு சென்று ஆசிரியை ஒருவர் கணித பாடம் கற்று கொடுத்தார்.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு
கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட குங்கூர்மூலா அரசு மேல்நிலை பள்ளியில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பழங்குடியின மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பெரும்பாலான நாட்களில் பழங்குடியின மாணவர்கள் பள்ளிக்கு வந்து பாடங்கள் படிப்பதை தவிர்த்து விடுகின்றனர். அவர்களை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் இணைந்து கண்காணித்து பள்ளிக்கு அழைத்து வரும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.
இதில் பழங்குடியின மாணவர்கள் பலர் தேர்வு எழுத வராமல் இருந்தனர். இதனால் அதே பள்ளியை சேர்ந்த 10-ம் வகுப்பு கணித ஆசிரியை கனகமணி, பொதுத்தேர்வை புறக்கணிக்கும் பழங்குடியின மாணவர்களை அடையாளம் கண்டார். தொடர்ந்து கணித பாட தேர்வை பழங்குடியின மாணவ-மாணவிகள் அனைவரும் எழுதும் வகையில், அவர்களின் வீடுகளுக்கு மாலையில் நேரில் சென்று கடந்த சில நாட்களாக கணித பாடம் நடத்தி வந்தார்.
கணித பாடம்
இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. கணித பொதுத்தேர்வை அனைத்து மாணவர்களும் எழுதி உள்ளனர். இதுகுறித்து ஆசிரியை கனகமணி கூறும் போது, பகலில் மாணவர்களை தேடி சென்றால், அவர்கள் ஆசிரியரை பார்த்த உடன் ஓடி ஒளிந்து விடுகின்றனர். இதன் காரணமாக எனது கணவர் வேலுச்சாமி உடன் மாலை 6 மணிக்கு மேல் குங்கூர்மூலா மற்றும் அதை சுற்றியுள்ள பழங்குடியின கிராமங்களுக்கு சென்று கல்வியின் முக்கியத்துவம் குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பின்னர் அவர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து, தங்கள் குழந்தைகளை பாடங்கள் படிக்க உட்கார வைத்தனர். இதனால் பொதுத்தேர்வை சிரமமின்றி எழுதும் வகையில், அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தேன். மேலும் அவர்கள் தேர்ச்சி பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றேன்.